வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 4ஆம் தேதி கரையை நெருங்கும்
சென்னை: வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி டிசம்பர் 4ஆம் தேதி வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக் கூடும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி குமரிக்கடல் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக,
நவ. 30ல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
டிசம்பர் 1ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
வங்கக் கடல் பகுதியில்..
தெற்கு தாய்லாந்து மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது இன்று மாலை தெற்கு அந்தமான் கடற்பகுதிக்கு நகரக்கூடும். அதனை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும்.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 3ஆம் தேதி மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று, 4ஆம் தேதி வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா கடற்பகுதியை நெருங்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடலில்
தற்போது மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மகாராஷ்டிரம் - கோவா கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.