கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்காததால் சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு தக்காளி மைதானத்தை திறக்க வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற விசாரணையில், கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் இடத்தை ஒதுக்கவும் செவ்வாய்க்கிழமை முதல் அந்த இடத்தை பயன்படுத்தவும் மேலும், சோதனை அடிப்படையில் இரு வாரங்களுக்கு இதனைக் கடைப்பிடித்து அதில் உள்ள நிறை குறைகளை மனுதாரர், கோயம்பேடு சந்தை கமிட்டி என இருதரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தக்காளி ஏற்றிவந்த வாகனங்களை நிறுத்த இன்று இடம் வழங்கப்படவில்லை. இதையடுத்து நீதிமன்றத்தில் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.
தொடர்ந்து இன்று நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு முன்பாக இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.