அம்மப்பள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி திறந்துவிடப்பட்ட தண்ணீரால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் கரோயோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், தமிழக-ஆந்திர மாநிலை எல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணைக்கப்பட்டு நிரம்பியுள்ளது. இதனால் ஞாயிற்றுக்கிழமை மதியம் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த தண்ணீர் பள்ளிப்பட்டு வழியாக நெடியம், சொரக்காய்பேட்டை வழியாக திருத்தணி வட்டம், நல்லாட்டூர், என்.என்.கண்டிகை வழியாக லட்சுமாபுரம் பகுதியில் கொற்றலை என்கிற கொசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் ஓரம் அமைந்துள்ள 29 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எச்சரிக்கையுடன் ஆற்றின் பக்கம் செல்ல வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.