சென்னை: விஜயதசமியன்று தமிழகத்தில் உள்ள கோயில்களைத் திறக்க வாய்ப்புள்ளதா? என தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமி பண்டிகைக் கொண்டாடப்பவிருக்கும் நிலையில், அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள கோயில்களை திறக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகத்தில் விஜயதசமியன்று கோயில்களைத் திறக்க வாய்ப்புள்ளதா என்பதை தமிழக அரசிடம் கேட்டுத் தெரிவிக்குமாறு அரசின் தலைமை வழக்குரைஞருக்கு தெரிவிக்கப்பட்டு, வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஒத்திவைத்தது.
மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தமிழகத்தில் கோயில்கள் வார இறுதி நாள்களில் மூடப்பட்டிருப்பதாக தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா நோய்ப் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வார இறுதி நாள்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வாரம் வெள்ளிக்கிழமை விஜயதசமி மற்றும் நவராத்திரி நிறைவு நாள் பண்டிகை வரவுள்ளதால் தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.