சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சித் தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க- தேவா் ஜெயந்தி விழா: அக்.29 இல் சசிகலா பங்கேற்பு
மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது, அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் அவர்களை ஏற்றுக் கொள்வது என்பது மக்களின் மனநிலையை பொருத்தது. சாதாரண தொண்டர்களின் இயக்கமாக அதிமுகவை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடங்கினார். அதே வழியில் இப்போதும் அதிமுக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- சசிகலா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்களது வழிகாட்டலின் படி அதிமுக செயல்பட்டுவருகிறது. சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் கூடி கலந்து பேசி முடிவு எடுப்பர்.
இதையும் படிக்கலாமே.. ஓர் அறிக்கை, இரு பேட்டிகள்: பிளவை நோக்கிச் செல்கிறதா அதிமுக?
ஏழை எளிய மக்களுக்காக பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தினார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு தடை செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- ‘அதிமுக பொதுச்செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு அதிகாரம் இல்லை’
அதிமுக அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்பட திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்திட்டங்கள் நிறுத்தப்பட்டால் சட்டபூர்வமாக மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் காவல் துறையின் சோதனைக்கு உள்ளாக்கப் படுகின்றனர். திமுக அரசு மிகவும் அவசரப்பட்டு கொண்டிருக்கிறது.
அதிமுகவை அழிக்க நினைக்கிறது, அது ஒருபோதும் நடக்காது.
முன்னாள் முதல்வர் அண்ணா கற்றுத்தந்த கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியவற்றை அதிமுக பின்பற்றி வருகிறது. அதிமுகவை பொறுத்தவரை கண்ணியத்தோடு நடந்து கொள்வதையே விரும்புகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் அத்துமீறல்கள் காரணமாக பல இடங்களில் அதிமுகவின் வெற்றி பறிக்கப்பட்டுள்ளது என்றார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கூறும்நிலையில் ஓ.பன்னீர்செல்ம் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ளார்.