கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது. புதுவையிலும் கடந்த இரு தினங்களாக பரவலாக லேசாக மழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு புதுச்சேரி நகரில் மழை பெய்யத் தொடங்கி, தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
இதனையடுத்து சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பகல் 12 மணிக்கு தொடங்கிய மழை, தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் சாலைகளில் மழை நீர் வழிந்தோடுகிறது. புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை தொடர்ந்து பிற்பகல் வரை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.