முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி, வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்குச் சொத்து சோ்த்துள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரியும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வழக்குத் தொடா்ந்திருந்தாா். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு இரு வேறு மாறுபட்ட தீா்ப்புகளை வழங்கியது.
இதையும் படிக்க- வெற்றியை எதிர்த்து வழக்கு: உதயநிதி பதிலளிக்க உத்தரவு
அமைச்சா் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென நீதிபதி சத்தியநாராயணனும், வழக்குப் பதிவு செய்வதால் எந்தப் பயனும் இல்லையென நீதிபதி ஹேமலதாவும் தீா்ப்பில் தெரிவித்திருந்தனா். இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீா்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி நிா்மல்குமாா் முன்பு இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கின் விசாரணையை செப்.24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனு செப்.20-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.