சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காலாவதியான சாக்லேட்டுகளை தின்ற இரண்டு பசு மாடுகள் பலி மேலும் 2 பசு மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேட்டூர் அருகே உள்ள பிஎன் பட்டி பேரூராட்சியில் உள்ளது கோம்பூரான்காடு. இங்குள்ள மக்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கம் போல் தங்களது கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டனர்.
காலாவதியான சாக்லேட்டுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை பார்வையிடும் காவல்துறையினர் மற்றும் மக்கள்.
புது சாம்பள்ளி மயானம் அருகில் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டிருந்த காலாவதியான சாக்லேட்டுகளை மாடுகள் தின்ற சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தன. இதில் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன. மேலும் இரண்டு மாடுகளுக்கு சின்ன கோனூர் கால்நடை மருத்துவர் அரவிந்தன் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்.
நான்கு மாடுகளும் கோபுரம் காட்டை சேர்ந்த பெரமன் (60) என்பவருக்கு சொந்தமானது. மாடுகள் இறந்து போனதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் காலாவதியான சாக்லேட்டுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்களது கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சாக்லேட் கொட்டப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஆரம்பப் பள்ளி உள்ளது. பள்ளி இயங்காததால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இச்சம்பவம் மேட்டூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலாவதியான சாக்லேட்டுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வரும் மேட்டூர் வட்டாட்சியர் ஹசினா பானு.
கருமலைக்கூடல் போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேட்டூர் வட்டாட்சியர் ஹசினா பானு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.