தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ. வைரஸ் தொற்று இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று உலக சுகாதார நாளை முன்னிட்டு சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சமூக நல நிலையத்தில் “உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா அடிக்கல் நாட்டு விழா மற்றும் மேம்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆய்வு” நடைபெற்றது.
இதில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டோர் அனைவரும் “சுகாதாரத்தினை கடைப்பிடிப்போம்” என்ற உறுதி மொழியினை ஏற்றனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் உருமாற்றமடைந்த எக்ஸ்.இ(XE) வைரஸ் தொற்று இதுவரை கண்டறியப்படவில்லை. அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.