மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் இரு ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஆறாவது நாள் கீழமேல்குடி கிராமத்தார் மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன், பிரியாவிடை சமேதமாய் ஸ்ரீ சோமநாத சுவாமி இரு ரிஷப வாகனங்களில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
சித்திரை திருவிழாவில் கழுவன், கழுவச்சி உருவ பொம்மைகள் மீது பூக்களை வைத்து தரிசனம் செய்த பக்தர்கள்.
அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடை பெற்றது. மானாமதுரை பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமி யும் இரட்டை சப்பரங்களில் எழுந்தருளினர். தீபாராதனை நடைபெற்று சப்பரங்கள் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தது.
அப்போது தெற்கு ரத வீதியில் கழுவன் கழுவச்சி பொட்டலில் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சப்பரங்களில் இருந்தவாறு ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி சேர்ந்து கழுவன் கழுவச்சிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கழுவன் கழுவச்சி உருவபொம்மைகள் மீது பூக்களை வைத்து தரிசித்தனர். சப்பரங்கள் நள்ளிரவு கோயிலை வந்தடைந்தன.