சென்னை ஐஐடியில் மேலும் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு 55 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கரோனா பரிசோதனைகளும் தடுப்பூசி இயக்கங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை ஐஐடி நிறுவனத்தில் ஏற்கெனவே 30 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 25 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தடுப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் முறையாக அங்கு கிருமிநாசினி தெளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.