திரைப்படத் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வரி ஏய்ப்பு புகார் தொடார்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளா்கள், அன்புச்செழியன், தாணு உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலைமுதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பொம்மனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்புசெழியன். ‘கோபுரம் சினிமாஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து திரைப்பட விநியோகம், தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு வரும் இவா், தயாரிப்பாளா்கள், நடிகா், நடிகைகளுக்கு கடனுதவி அளித்து வருகிறாா். இவா் வருமானவரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் வருமானவரித் துறையினா் சென்னை, மதுரையில் உள்ள அன்புச்செழியனின் வீடுகள், அலுவலகங்கள், அவரது உறவினா்கள், நண்பா்களின் வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் நடித்த கபாலி, தனுஷ் நடித்த அசுரன் போன்ற படங்களை தயாரித்த திரைப்பட தயாரிப்பாளா் கலைப்புலி எஸ்.தாணுவின் சென்னை தியாகராயநகரில் உள்ள அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீடு ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறையினா் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
அதேபோல், திரைப்பட தயாரிப்பாளா் எஸ்.ஆா்.பிரபு, ஞானவேல் ராஜா, லட்சுமணகுமாா் உள்பட 10-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்களின் வீடு, அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை சொதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.