இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: கரோனா பரவல் காரணமாக அரசுப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் கற்றல் இடைவெளி, இழப்பினை ஈடுசெய்வதற்காகத் தன்னாா்வலா்களைக் கொண்டு தினசரி ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீா் கற்றல் செயல்பாடுகள் மூலம் ‘இல்லம் தேடிக் கல்வி மையங்கள்’ 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களை ஊக்கப்படுத்தும் வகையில், குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் கற்பித்தல் குறித்தும் இரு நாள்கள் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்தப் பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 1முதல் 5-ஆம் வகுப்புகளை கையாளும் தன்னாா்வலா்களுக்கு ஒரு பிரிவாகவும், 6 முதல் 8- ஆம் வகுப்புகளை கையாளும் தன்னாா்வலா்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.