

எடப்பாடி: பூலாம்பட்டி காவிரிக் கதவணை நீர்த்தேக்க பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை நீர்த்தேக்கத்தில், நீர் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கதவணை நீர்ப்பரப்பில், சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதியான நெருஞ்சிப்பேட்டைக்கு இடையே, இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையிலான விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனை இரு மாவட்டங்களையும் சேர்ந்த அரசு அலுவலர்கள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பயன்படுத்தி வந்த நிலையில், அண்மையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து அதிகப்படியான உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் பூலாம்பட்டி கதவனை பகுதியில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில், பயணிகளின் பாதுகாப்பினை கருதி கடந்த 1ஆம் தேதி முதல் இப்பகுதியில் இயக்கப்பட்டு வந்த விசைப்படகு போக்குவரத்தினை மாவட்டநிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.
இதையும் படிக்க | பேராசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி: இளைஞர் தீக்குளித்து தற்கொலை
இந்நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், 16 நாள்களுக்குப் பிறகு பூலாம்பட்டி பகுதியில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு புதன்கிழமை முதல் விசைப்படகு போக்குவரத்து தொடங்கியது. அணையில் நீரோட்டம் கூடுதலாக இருந்து வரும் நிலையில் விசைப்படகில் மிக குறைவான பயணிகளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதியில் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து தொடங்கிய நிலையில், நீண்ட தொலைவு பயணம் செய்து மறுகரைக்குச் சென்று வந்த மக்கள் தற்போது மகிழ்ச்சியுடன் இந்த விசைப்படகு போக்குவரத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.