போஸ் கொடுத்தால் போதுமா; கடன் கொடுக்க மாட்டீர்களா? கதறும் நரிக்குறவர்களின் கண்ணீரைத் துடைக்குமா அரசு? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியை சேர்ந்த நரிக்குறவப் பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோயிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார்.
இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதல்வரே நேரில் சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், அவர்களுக்கு இன்னும் தீர்வுகிடைக்கவில்லை.
"மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள்" என்று அஸ்வினியும், மற்ற நரிக்குறவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களிடம் முறையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நரிக்குறவர்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுமென மநீம வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.