விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை அரசரடி பகுதியில் சிறையில் தண்டனைக் கைதிகளால் விதைப்பந்து விநாயகர் தயாரிக்கப்படுவதாக சிறை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகின்ற 31 ஆம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதற்காக விநாயகர் சிலைகள் செய்யும் பணி நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மதுரை அரசரடி பகுதியில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தண்டனைக் கைதிகளை வைத்து களிமண்ணால் ஆன விதைப் பந்துகள் வைத்து ஒன்றரை அடி அளவில் விநாயகர் சிலை செய்யும் பணியானது துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகள் முடிந்தவுடன் சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய சிறை அங்காடி மூலம் விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சந்தை மதிப்பை விட குறைந்த விலையில் விநாயகர் சிலை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மதுரை மத்திய சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.