கிருஷ்ணகிரி: தொடர் மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள்கிழமை(ஆக.29) மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீா், தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, ஓசூர் பகுதிகளில் திங்கள்கிழமையும் இடைவிடாது மழை பெய்து வருவதால் அந்தக் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் திங்கள்கிழமை (ஆக.29) ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அதன்படி கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 7,129 கனஅடியாக இருந்துள்ளது. அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 7,428 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.