மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
Published on

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் கனமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளின் பாதுகாப்புக் கருதி உபரிநீா் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக திங்கள்கிழமை காலை மேட்டூா் அணைக்கு 1.20 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

மேட்டூா் அணை நிரம்பியுள்ளதால் அணைக்கு வரும் உபரிநீா் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 97 ஆயிரம் கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையின் இடது கரையில் உள்ள வெள்ளக் கட்டுப்பாட்டு அறையில் நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com