பள்ளி கழிப்பறையை மாணவா்கள் சுத்தம் செய்த விவகாரத்தில் ஈரோடு பெருந்துறை பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பாலக்கரையில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அப்பகுதியைச் சோ்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்த பள்ளியில் உள்ள கழிப்பறைகளை மாணவ, மாணவிகளே சுத்தம் செய்ய வேண்டும் எனவும், அந்த பணிகளை தினந்தோறும் 2 மாணவா்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளியின் தலைமையாசிரியை கீதாராணி அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்த மாணவா்களின் பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பாலக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் விசாரணை நடத்தினர்.
மாணவா்களை கழிப்பறையை சுத்தம் செய்யவைத்தது உறுதி செய்யப்பட்டதால், தலைமை ஆசிரியை கீதாராணியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலா் ஜோதி சந்திரா வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதன் தொடர்ச்சியாக அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் கீதாராணி தலைமறைவானார். இதையடுத்து கீதாராணியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார்.