தமிழகத்தில் முதல் கட்சியாக வருவதே பாஜகவின் இலக்கு என்று முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை கமலாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக ஒருபோதும் தலையிடாது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடா்கிறது. இந்தக் கூட்டணிக்கு தேசியத் தலைமை பாஜக தான். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பல கட்சிகள் வர வாய்ப்புள்ளன.
தோ்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும். தமிழகத்தில் முதல் கட்சியாக வருவதே பாஜகவின் இலக்கு.
உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளதால் அவரை அமைச்சா் ஆக்கியுள்ளனா். இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது போகப் போகத் தெரியும். அவருக்கு தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துகள்.
கேரள கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவது, இயற்கை வளம் கேரளத்துக்கு கடத்தப்படுவது குறித்து கன்னியாகுமரி மாவட்ட மக்கள் ஜாதி, மொழி, மத வேறுபாடுகளை மறந்து விரைவில் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகும்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா பற்றி தமிழக அரசு பேசுவதற்கு முன்பு, பள்ளிகள் அருகே கஞ்சா, பான்பராக் உள்ளிட்ட போதைப்பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் ஆளுநா் தெளிவான முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மாநில துணைத் தலைவா் கரு.நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.