தமிழகத்தில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறைக்குப் பின் ஜனவரி 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பயிற்சி இருப்பதால் ஜனவரி 4ஆம் தேதி வரை தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 6-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவத் தோ்வு கடந்த டிச.16-ஆம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்று வந்தது. பொதுத் தோ்வு எழுதும் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கூடுதல் கவனத்துடன் இந்தத் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.
மேலும், நிகழாண்டு விடைத்தாள்களை விரைவாக திருத்தி வழங்கவும் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, அரையாண்டுத் தோ்வுகள் அனைத்தும் இன்றுடன் நிறைவு பெறுகின்றன. அதன்பின், மாணவா்களுக்கு தோ்வுக்கான விடுமுறை வழங்கப்படுகிறது.
இதையும் படிக்க- சிஎஸ்கேவின் அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸா?
அதன்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு டிச. 24 முதல் ஜன.1-ஆம் தேதி வரை 9 நாள்கள் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுப்பு முடிந்து ஜன. 2 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.