முல்லைப் பெரியாறு அணையின் உறுதி குறித்து மறு ஆய்வு: 5 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

முல்லைப் பெரியாறு அணையின் உறுதி குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேற்பார்வை குழுவும், மத்திய நீர்வள ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது.
முல்லைப் பெரியாறு அணையின் உறுதி குறித்து மறு ஆய்வு: 5 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி

முல்லைப் பெரியாறு அணையின் உறுதி குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேற்பார்வை குழுவும், மத்திய நீர்வள ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் நலனுக்கு எதிராகவும், கேரள அரசின் பொய் பிரசாரத்திற்கு வாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது என்று விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன வசதிக்கு ஜீவாதார நாடியாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியும் பல்வேறு நபர்கள் மூலம் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து வழக்கு தற்போது நடைபெற்று வருகின்றது.

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் 2010ல் உத்தரவிட்டு ஆய்வுக் குழுவை அமைத்தது. ஆய்வுக் குழுவினரும் 2010, 2012இல் அணையை முழுமையாக ஆய்வு செய்து பலமாக உள்ளது என்று அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதற்கிடையில் கடந்த 2021 நவம்பர், டிசம்பர் மாதங்களில் கேரளத்தில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் உபரி நீர் கேரளாவுக்கு திறக்கப்பட்டது. இதனால் அணையின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து உள்ளது என்றும், முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை திறந்துவிட்டனர் என்று கேரள அரசு குற்றம் சாட்டியது.

இந்நிலையில் மத்திய நீர்வள ஆணையமும், அணையின் மேற்பார்வை குழுவும் உச்சநீதிமன்றத்தில், அணையின் உறுதித் தன்மையைப் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று நிலை அறிக்கை சமர்ப்பித்து அதில் தெரிவித்தனர். 

உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய பல்வேறு நிபுணர் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்து, அதன் உறுதித் தன்மையை உறுதி செய்தது. இந்நிலையில் மத்திய நீர்வள ஆணையமும், மத்திய மேற்பார்வை குழுவும் அணையின் உறுதித் தன்மையை மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்து இருப்பது,  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாக உள்ளது என்று 5 மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய கண்காணிப்புக் குழுவைக் கண்டித்து போராட்டம்

இதுபற்றி பெரியாறு வைகை பாசன 5 மாவட்ட விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர் பாலசிங்கம் கூறியது, மத்திய நீர்வள ஆணையமும், பாதுகாப்பு குழுவும்உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையின் பின்னணியில்,  கேரள  அரசியல்வாதிகள் இருக்கிறார்களோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

தென்மேற்கு பருவமழை காலத்தில், அணையின் பாதுகாப்பு குறித்து கேரளாவின் கேள்விகளுக்கெல்லாம், முறையாக பதில் சொல்லி வந்த மத்திய நீர்வள ஆணையம், திடீரென அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 5 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர்களை நிலங்களை அழிக்க கேரளாவின் உத்தேச முடிவுக்கு மத்திய நீர்வள ஆணையம் துணை போகிறதா. இதனால் தான்  விவசாய சங்கங்கள் அணைகள் பாதுகாப்பு மசோதாவைக் கடுமையாக எதிர்த்தனர்.

இனி கேரளா முழுவதும் மத்திய நீர்வள ஆணையத்தின் பிரமாணத்தை முன்னிறுத்தி போராட்டங்கள் வெடிக்கக்கூடும். கேரளா அதை தனக்கு சாதகமாகவே பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை கேள்விக்குள்ளாக்கி இருக்கும் மத்திய நீர்வள ஆணையத்தையும், பாதுகாப்புக் குழுவையும் கண்டித்து விரைவில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவியளவில் போராட்டத்தை முன்னெடுப்போம்.

பேபி அணையைப் பலப்படுத்த வேண்டும்

முல்லைப் பெரியாற்றின் பிரதான அணை உறுதியாக இருக்கும் நிலையில், பேபி அணை பலப்படுத்துவதற்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல ஆண்டுகளாக தொடர்ந்து அனுமதி கேட்டு போராடி வருகின்றனர்.

கட்டுமான தளவாடப் பொருட்கள் கொண்டு செல்லும் தரை மார்க்க பாதையாக வல்லக்கடவு பாதையை இன்றளவும் சரி செய்து தரவில்லை. அங்கு மரங்களை வெட்ட அனுமதி கொடுத்த கேரள வனத்துறை அதிகாரியை மிரட்டும் விதமாக கேரள அரசு சஸ்பெண்ட் செய்தது.

அணை  உடைய போகிறது என்ற சினிமாக்காரர்களை வைத்து சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யப்பட்டது. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் விரைவில்
உச்ச நீதிமன்றத்தை நாடி மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு அறிக்கையை ரத்து செய்யவுடன், பேபி அணையை பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்த 5  மாவட்ட விவசாய சங்கத் தலைவர் கே.எம்.அப்பஸ் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com