மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் திருக்கோயிலில் உற்சவ மூர்த்தியை தூக்கி செல்ல பயன்படும் "படிச்சட்டம் ” தோளுக்குகினியாள் என்றழைக்கப்படும்.
இது மரத்தினால் செய்யப்பட்டு மேலே வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்டு இருக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த படிச்சட்டத்தில் கவசமாக போடப்பட்டிருந்த வெள்ளி தகடுகள் உரித்து எடுக்கப்பட்டு களவாடப்பட்டது.
இந்த களவுச் செயல் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. மாறாக புதியதாக படிச்சட்டம் ஒன்று வெள்ளி தகடுகளுடன் செய்து பழையது போன்றே கோயிலில் வைத்திட குற்றவாளிகளால் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், இதன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னை கே.கே நகரைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் சிலை தடுப்பு பிரிவில் புகார் அளித்தார்.
விசாரணை செய்தபோது கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருடப்பட்டது உறுதியானது. பின் 01.02.2022-ஆம் தேதி சிலை திருட்டு தடுப்பு பிரிவு எண். 03/2022 u/s 403, 406, 409, 202, 120-பி, 454(2), 380(2), 468, 471 ஐபிசி ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்குத் தொடர்பாக ஸ்ரீநிவாச ரங்க பட்டர், முரளிதர தீட்சிதர் ஆகியோரை விசாரணை செய்ததில் இவர்கள் படிச்சட்டத்தில் வெள்ளி தகடுகளை உரித்து களவாடியது உறுதிசெய்யப்பட்டது.
மேலும் பழைய படிச்சட்டத்தை போன்றே வெள்ளி தகடுகள் பதித்து புதியதாக படிச்சட்டம் செய்திட மயிலாடுதுறையில் உள்ள தனியார் நகைக் கடையில் பழைய படிச்சட்டத்திலிருந்து உரித்து எடுத்து உருக்கிய வெள்ளிகட்டிகளைக் கொடுத்ததும், போதாததற்கு நன்கொடையாளர்கள் மூலம் பணம் கொடுக்கச் செய்ததும் தெரியவந்தது.
இந்த இருவரையும் கைது செய்து அவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் படி தனியார் நகைக் கடையில் புதிதாக செய்யப்பட்ட புதிய படிச்சட்ட வெள்ளி உருப்படிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மேலும் புதியதாக செய்யப்பட்ட படிச்சட்டத்திற்கு வெள்ளி உருப்படிகள் 15 கிலோ எடையில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.