செய்யாறு: தமிழகத்தில், இரு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஒரு அரசு மருத்துவமனை, 2 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றை மத்திய அரசு அண்மையில் வழங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புகுழி (பாலுசெட்டிசத்திரம்) (சிஎன்சி) சமுதாய சுகாதார நிலையம், சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் (பிஎச்சி) ஆரம்ப சுகாதார நிலையம், திருமங்லம் (எஸ்டிஎச்) அரசு மருத்துவனை ஆகியவற்றில் மருத்துவமனைகளில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மருத்துவக்குழுவினர் டிச.23 -ல் தொடங்கி ஜன.6 வரையில் நேரில் முகாமிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த மருத்துவக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 98 சதவிகித மதிப்பெண்களும், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 91சதவிகித மதிப்பெண்களும், திருப்புகுழி (பாலுசெட்டிசத்திரம்) சமுதாய சுகாதார நிலையத்திற்கு 87.1 சதவிகித மதிப்பெண்களும், சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 94 சதவிகித மதிப்பெண்களும், திருமங்லம் அரசு மருத்துவனைக்கு 91.42 சதவிகித மதிப்பெண்களும் வழங்கி இருந்தனர். அதன் அடிப்படையில் மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கியுள்ளது. .
மருத்துவக்குழுவினர் அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பம் நலத்துறையின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷெல் (ஐ.ஏ.எஸ்) ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கியுள்ளார். மத்திய அரசு வழங்கியுள்ள ஐ.எஸ்.ஒ. தரச்சான்று மூலம் சிறப்பான மருத்துவம் அளித்து வருவதற்கான அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து 3 வருடங்களுக்கு மத்திய அரசு மூலம் நிதி கிடைக்கும் என்றும், கிடைக்கும் நிதி மூலம் மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், அடிப்படை வசதிகள் போன்றவற்றிற்கு செலவு செய்து மருத்துவமனையை மேம்படுத்திக் கொள்ளலாம் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.