நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
சிதம்பரம்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிதம்பரம் மானா சந்தில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வாக்குச் சாவடிக்கு தனது மனைவி ஜான்சிராணியுடன் வந்த கே. பாலகிருஷ்ணன், நீண்ட வரிசையில் நின்று, விரலில் அடையாள மை இட்டு வாக்களித்தார்.
சிதம்பரத்தில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் கே. பாலகிருஷ்ணன் கூறியது:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த கூட்டணியில் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை அதிமுக நடத்தாமல் இருந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதிகாரப் பரவலை கொடுக்க அதிமுக அரசு மறுத்து விட்டது. அமைச்சர்களையும், அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு ஒரு கொள்ளை ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது.
இதையும் படிக்க | திமுக வெற்றி மிகப் பிரகாசமாக உள்ளது: கே.என்.நேரு பேட்டி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் நகரங்களில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை மேம்பாடு போன்ற எந்த திட்டங்களும் சரிவர செயல்படுத்தப்படவில்லை. தெருவிளக்குகள் கூட சரிவர எரியவில்லை.
உள்ளாட்சிகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான் நல்ல நிர்வாகம் மேம்படும். மக்கள் பிரதிநிதிகளே இல்லாமல் நகராட்சி நிர்வாகம் சீரழிந்து விட்டது.
தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு நகர்ப்புற வளர்ச்சிக்காக ஒரு உள்ளாட்சி ஒருங்கிணைந்த சட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.
கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ளதைப்போல உள்ளாட்சிகளுக்கு அதிக நிதியும், அதிக அதிகாரமும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதை அனைத்து மாநகராட்சி நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம் என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதையும் படிக்க | ‘11 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்’