உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கான உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள இந்தியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களின் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு இந்தியத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கு உடனடி முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “உக்ரைனில் இருந்து வரும் போர்த் தகவல்கள் கவலை அளிக்கின்றன. தமிழகத்தில் இருந்து உக்ரைன் சென்று படிக்கிற மாணவர்கள் நிறைய இருக்கிறார்கள். இந்திய வெளியுறவு அமைச்சகம் மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் நாடு திரும்பலையும் உறுதி செய்ய உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.