கரோனா தடுப்புப் பணிகளில் திமுக அரசு துரிதமாக செயல்படுவதாகக் கூறிய அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கத்திற்கு நன்றி என பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் புதன்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, 'பொதுவாக ஆளுநர் உரை என்பது அரசின் கொள்கை. ஆட்சியாளர்களுடைய கொள்கைத் திட்டங்களை விளக்குவதே ஆளுநருடைய பேருரை என்பது அறிஞர் அண்ணாவின் கருத்து. ஆளுநர் உரை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஒரு சில வரிகளிலேயே அண்ணா தெரிவித்துள்ளார்.
அவரின் கூற்றுப்படியே ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆளுநர் உரையில் அரசின் திட்டங்கள் குறித்த பாராட்டுகள் என்னுடைய தனிப்பட்ட பாராட்டுகள் அல்ல. அமைச்சரவைக்கே கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகள். அரசினுடைய அங்கமாக இருக்கக்கூடிய அதிகாரிகள், அலுவலர்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுக்கள். எங்களை ஆட்சிப் பொறுப்பிலே அமர்த்தியய மக்களுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பாராட்டுகள். எங்களை ஆட்சிப் பொறுப்பில் ஏற்ற உழைத்த திமுகவினருக்கு கிடைத்த பாராட்டுகள்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும் அரசின் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், கரோனா தடுப்புப் பணிகளில் திமுக அரசு துரிதமாக செயல்படுகிறது என்று பாராட்டிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு நன்றி' எனவும் தெரிவித்தார்.