செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஒத்திவாக்கம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு அதிதீவிர படை பயிற்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் 3 நாட்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
மண்டல அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தென்மண்டலம், வடக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மற்றும் தலைமையிட அணி என 8 அணிகள் கலந்து கொண்டன.
காவல்துறையில் பணியாற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற பல்வேறு ரக துப்பாக்கிகள் சுடும் போட்டியில் மத்திய மண்டலமான திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் தலைமை மண்டலமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்கள் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச்சென்றனர்.
இரண்டாவதாக வெற்றி பெற்ற தென் மண்டலங்களைச் சேர்ந்த தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் காவலர்கள் இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர்.
அதிரடிப் படை, அதிவிரைவுப் படை காவலர்கள் அணி மூன்றாம் பரிசினை வென்றனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகள், கேடயங்களை வழங்கி வெற்றி பெற்ற மண்டல அணிகளுடன் புகைபடங்களை எடுத்துக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கூடுதல் காவல் செயளாலர் அமல் ராஜ் ஐ.பி.எஸ், இந்திய அளவில் சிஆர்பிஎப், எஎஸ்எப் அணிக்கு பிறகு தமிழக காவல்துறை மூன்றாவது அணியாக நிற்பதாக தெரிவித்தார்.
மாநில அளவில் தமிழக காவல்துறை முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற மண்டல வாரியான குழுக்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் முதல்முறையாக மகளிருக்கென சிறப்பு அணி ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் அணிகள் இந்தியா அளவில் நடக்கவுள்ள போட்டியில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறினார்.