தமிழகத்திலிருந்து ஒமைக்ரான் மரபணு சோதனைக்கு மாதிரி அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டு விட்டதாக மாநில நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் வகை கரோனா நாடு முழுவதும் பரவத் தொடங்கியது முதல் மாதிரிகளை மரபணு சோதனைக்காக பெங்களூரு, புணே ஆய்வகங்களுக்கு மாநில மருத்துவத்துறையினர் அனுப்பி முடிவுகளை பெற்று வந்தனர்.
இந்நிலையில், தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தில் தொற்று உறுதியாகி மரபணு சோதனை மேற்கொள்வதில் 85 சதவீதம் பேருக்கு ஒமைக்ரானும், 15 சதவீதம் பேருக்கு டெல்டா வகையும் உறுதியாகி வருகின்றது.
ஒமைக்ரான் பாதிப்பின் முடிவு வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்படுவதை நிறுத்திவிட்டோம்.
டெல்டாவும் ஒமைக்ரானும் இணைந்து இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான அறிகுறியே இருப்பதால் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.
மேலும், அரசு ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை வருவதால், மெகா தடுப்பூசி முகாமை இந்த வாரத்திற்கு பதிலாக அடுத்த வாரம் நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்