சேலம் அருகே பேய் விரட்டும் திருவிழா: இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு வினோதம்!

சேலம் அருகே தமிழகத்தின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் வினோதமாக, காணும் பொங்கல்தோறும், முன்னோர்களின் வழியில் பேய் விரட்டும் திருவிழா மரபு மாறாமல் இன்றளவும் நடந்து வருகிறது.
சேலம் அருகே பேய் விரட்டும் திருவிழா: இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு வினோதம்!


சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பொன்னாரம்பட்டி கிராமத்தில், தமிழகத்தின் வேறெந்தப் பகுதியிலும் இல்லாத வகையில் வினோதமாக, காணும் பொங்கல்தோறும், முன்னோர்களின் வழியில் பேய் விரட்டும் திருவிழா மரபு மாறாமல் இன்றளவும் நடந்து வருகிறது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் பொங்கல் பண்டிகை தருணத்தில் எருதாட்டம், மஞ்சுவிரட்டு மற்றும் பானை உடைத்தல், வழுக்கு மரமேறுதல், சடுகுடு கபடிப்போட்டி உள்ளிட்ட பாரம்பரியத்தை பறை சாற்றும் விளையாட்டுகள் மட்டுமின்றி,  கால்நடைகள் ஊர்வலம், வங்காநரி ஜல்லிக்கட்டு ஆகிய வினோத நிகழ்வுகளும் முன்னோர்கள் வழியில் நடந்து வருகிறது.

வித்தியாசமான திருவிழாக்கள், வியப்பூட்டும் வழிபாட்டு முறைகளுக்குப் பெயர் பெற்ற வாழப்பாடி பகுதியில் பொன்னாரம்பட்டி கிராமத்தில், இந்த அதிநவீன காலத்திலும் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல் காணும் பொங்கல்தோறும் பேய் விரட்டும் திருவிழா நடந்தேறி வருகிறது. 

பொன்னாரம்பட்டி கிராமத்தில் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா நடத்துவதற்காவே, பரம்பரை மிராசு கொண்ட பூசாரி குடும்பத்தினர், பொங்கல் பண்டிகை துவங்குவதற்கு முன்பே, புலால் மறுத்து, காலணிகள் தவிர்த்து ஒரு வாரம் விரதமிருக்கின்றனர்.

காணும் பொங்கல் தினத்தன்று பேய் விரட்டுவதற்காக முன்னோர்கள் வடிவமைத்துக் கொடுத்த பழங்குடியினர் ஒத்த ஆடையை அணிந்து கொள்ளும் பூசாரிகள், மேள வாத்தியம் முழங்க ஆற்றங்கரைக்குச் செல்வார்கள். அங்கு கூடியிருக்கும் பெண்களை அழைத்து தலைமுடியை கையில் பிடித்துக் கொண்டு முறத்தால் தலையில் மூன்று முறை அடிப்பார்கள். பிறகு விபூதி வைத்து அனுப்பி விடுவார்கள்.

விரதமிருந்து சிறப்புப் பூஜை வழிபாடு நடத்திய பிறகு பேய் விரட்டும் இந்த பூசாரிகளிடம் முறத்தடி வாங்கினால், நல்ல வரன், குழந்தை பாக்கியம் கிடைக்குமென நம்பிக்கை தொடர்ந்து வருவதால், காணும் பொங்கல் தினமான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த வினோத விழாவில், ஏராளமான பெண்கள் தாமாக முன்வந்து, பூசாரிகளிடம் முறத்தடி வாங்கி பேய் விரட்டிக் கொண்டனர்.

இந்தப் பேய் விரட்டும் திருவிழாவைக்காண, பல்வேறு பகுதியைச் சேர்ந்த பெண்கள் கூடியிருந்தனர்.

இதுகுறித்து பொன்னாரம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் கலைச்செல்வி, தீபா மணி ஆகியோர் கூறியதாவது:

"இந்த நவீன காலத்திலும் எங்களது கிராமத்தில் ஆண்டு தோறும் காணும் பொங்கலன்று பேய் விரட்டும் விழா தொடர்ந்து நடந்து வருகிறது. விரதமிருந்து சிறப்புப் பூஜை வழிபாடுகள் செய்யும் பூசாரிகள் முறத்தால் அடிப்பதால், தனக்குள் இருந்த குழப்பமான எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, புத்துணர்வும் தன்னம்பிக்கையும் ஏற்படுகிறது.

இதுமட்டுமின்றி,தேவையற்ற மனக்குழப்பங்கள் நீங்குவதோடு, நல்ல வரனும், குழந்தை பாக்கியமும் கிடைக்குமென்ற நம்பிக்கையும் தொடர்ந்து வருவதால், வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கப்பட்ட பெண்களும் காணும் பொங்கலன்று சொந்த கிராமத்திற்கு வந்து பூசாரிகளிடம் சென்று பேய் விரட்டிக் கொள்கின்றனர்" என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com