வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அண்மையில் உயிரிழந்த திமுக பிரமுகருக்கு உணவில் விஷம் கலந்துகொடுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, அவரின் மனைவி மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த இளைஞர் ஆகிய இருவரை போலீஸார் இன்று (ஜன.23) கைது செய்தனர்.
வேட்டைக்காரனிருப்பு, சடையன்காடு பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்.
திமுக கிளைச் செயலாளராக இருந்த இவர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார்.
கடந்த நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், டிச.15 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்திரசேகரன்.
உடல்நிலை தேறி இருந்த தேவேந்திரன், ஜன.4 ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆனால், உடல் நலம் பாதிப்பு மோசமாகி இருந்ததால் ஜன.6 ஆம் தேதி உயிரிழந்தார். இயற்கை மரணமாக கருதி உடல் தகனம் செய்யப்பட்டது.
இதனிடையே, தேவேந்திரன் மனைவி சூர்யா நடத்தையில் சந்தேகமடைந்த உறவினர்கள் அவரை தொடர்ந்து கவனித்து வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சூர்யா பேசிக் கொண்டிருந்த கணவர் தேவேந்திரனின் செல்போன் உரையாடல் சோதனையிடப்பட்டது.
இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் உணவில் எலி விஷம் கலந்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
மேலும், மனைவி சூர்யா மற்றும் வீட்டில் வேலை பார்த்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததும் தெரிய வந்தது.
இருவரும் தேவேந்திரனுக்கு கொடுத்த உணவில் சாம்பாரில் எலி மருந்தை கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள வேட்டைக்காரனருப்பு காவல் நிலைய போலீஸார், இருவரையும் கைது செய்துள்ளனர்.