அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் வேட்டைத் தடுப்புக் காவலர் காயம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் வேட்டைதடுப்புக் காவலர் ஒருவர் திங்கள்கிழமை காயமடைந்தார்.
வன ஊழியரைத் தாக்கும் சிறுத்தை
வன ஊழியரைத் தாக்கும் சிறுத்தை


அவிநாசி: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே சிறுத்தை தாக்கியதில் வேட்டைதடுப்புக் காவலர் ஒருவர் திங்கள்கிழமை காயமடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள பாப்பாங்குளத்தைச் சேர்ந்தவர் வரதராஜன்(63), இவரது தோட்டத்தில் உள்ள மக்காச்சோளத்தை அறுவடை செய்யும் பணியில் கடந்த சில நாள்களாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பணியில் வரதராஜனுடன், கூலித் தொழிலாளி மாறன்(66) திங்கள்கிழமை அதிகாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிறுத்தை இருவரையும் பலமாகத் தாக்கியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த வரதராஜனையும், மாறனையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சேவூர் காவல் துறையினர் மற்றும் திருப்பூர் கோட்ட வனத்துறையினரும் சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சிறுத்தையைத் தேடும் பணியில் வன ஊழியர்கள்
சிறுத்தையைத் தேடும் பணியில் வன ஊழியர்கள்

இந்த நிலையில், அமராவதி வனக்கோட்டத்துக்கு உள்பட்ட வேட்டை தடுப்புக் காவலர் மணிகண்டன்(40) சோளக்காட்டுக்குள் சிறுத்தையைத் தேடும் பணியில் திங்கள்கிழமை மாலையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவரது மேல் பாய்ந்த சிறுத்தை மணிகண்டனின் வலது தொடையைக் கடித்துக் குதறியது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், சோளக்காட்டில் பதுங்கியுள்ள சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் 30க்கும் மேற்பட்ட வன ஊழியர்களும், 20க்கும் மேற்பட்ட காவலர்களும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பாப்பாங்குளம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com