பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-இல் நடைபெற உள்ளது. பிப். 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.
இதையும் படிக்க- ஓபிஎஸ், அவரது மகன் மீதான வழக்கிற்குத் தடை
கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுகவுடனான கூட்டணி குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடினோம். தனித்துப் போட்டி என்ற கேள்விக்கு தற்போது அவசியம் ஏற்படவில்லை. கூட்டணி குறித்து முடிவெடுக்க அண்ணாமலைக்கு அதிகாரம் உள்ளது. அதிமுகவுடனான கூட்டணி சுமூகம், சுமூகம் இல்லை என்ற எந்தக் கருத்தும் நான் தெரிவிக்கவில்லை.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலை அண்ணாமலை அறிவிப்பார். தமிழகம் முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.