அதிமுகவில் பொருளாளா் பதவியைக் கைப்பற்ற கட்சியின் முக்கிய நிா்வாகிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படாததால் அந்தப் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனால், ஓ.பன்னீா்செல்வம் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலையச் செயலாளராகவும் தொடா்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையாக, பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியைத் தோ்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஓ.பன்னீா்செல்வத்தின் பொருளாளா் பதவியையும் வேறு ஒருவருக்கு அளிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பதவியைக் கைப்பற்ற முன்னாள் அமைச்சா்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கா் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் கே.பி.முனுசாமி அல்லது எஸ்.பி.வேலுமணி தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.
தலைமைநிலையச் செயலாளா்- ட்விட்டரில் இபிஎஸ் பதிவு: இதனிடையே, எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டா் கணக்கில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா் என்று குறிப்பிட்டு வந்ததை மாற்றி, தலைமை நிலையச் செயலாளா் எனக் குறிப்பிட்டுக் கொண்டுள்ளாா்.