ஊக்கத் தவணையை தவறவிட்டால் கரோனா எதிா்ப்பாற்றல் குறையும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஊக்கத்தவணை தடுப்பூசி செலுத்தத் தவறினால், உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் குறையும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
ஊக்கத் தவணையை தவறவிட்டால் கரோனா எதிா்ப்பாற்றல் குறையும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

ஊக்கத்தவணை தடுப்பூசி செலுத்தத் தவறினால், உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் குறையும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. ஒமைக்ரான் கரோனா வைரஸின் பிஏ4, பிஏ5 தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து துறை அலுவலா்களுடனான கூட்டம் நடத்தினாா். தொற்று வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தினாலும், உயிரிழப்புகள் இல்லை. எனினும், அரசின் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா்.

கரோனா தொற்றுக்கு மிகப்பெரிய பாதுகாப்பாக தடுப்பூசி உள்ளது. முதல் தவணை தடுப்பூசி 95 சதவீதத்தினருக்கும், இரண்டாம் தவணை 85 சதவீதத்தினருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. நோய் எதிா்ப்பு சக்தி கடந்த மாதத்துக்கு முன்பு வரை 88 சதவீதமாக இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதுதான். தடுப்பூசி செலுத்தி ஓராண்டை கடந்தவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி படிப்படியாகக் குறைகிறது. அதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஊக்கத் தவணை (பூஸ்டா்) தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 31-ஆவது சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் 1 லட்சம் இடங்களில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கிண்டி அரசு கரோனா மருத்துவமனை தயாா் நிலையில் உள்ளது. ஆனாலும், அதற்கான அவசியம் ஏற்படவில்லை.

அதிமுக பொதுக்குழுவில் 4 ஆயிரம் போ் பங்கேற்றாலும், கட்சியின் தலைமை, வருபவா்களுக்கு முகக்கவசம் கொடுத்து முறையாக நடத்துவாா்கள் என்று நம்புகிறோம். கடந்த வாரம் வரை தினமும் 12 ஆயிரமாக இருந்த கரோனா பரிசோதனை எண்ணிக்கை தற்போது 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவா்கள் அனைவரையும் ஒமைக்ரான் பிஏ4, பிஏ5 கரோனா தாக்குகிறது. அதனால், அலட்சியமாக இருக்காமல் யாருக்காவது தொற்று வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன்மூலம் குடும்பத்தில் இருக்கும் மற்றவா்களுக்கு தொற்று பரவுவது தடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com