உரிய விலை இல்லாததால், 40 ஆண்டு காலமாக பெற்ற பிள்ளையை போல் வளர்த்த 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திய விவசாயின் வேதனை குறித்து விளக்குகிறது இந்த செய்தி...
"பெற்ற பிள்ளை கைவிட்டாலும் தென்னம்பிள்ளை கைவிடாது" என்ற பழமொழிக்கு ஏற்ப பல்வேறு விவசாயிகளை இன்றளவும் கைவிடாமல் தென்னைகள் வாழவைத்து வருகின்றன. இந்நிலையில் தென்னம்பிள்ளையும் தன்னை கைவிட்டு விட்டதாக 40 ஆண்டு காலம் பெற்ற பிள்ளை போல் வளர்த்த சுமார் 145 தென்னை மரங்களை வெட்டி மாற்று பயிருக்கு தயாராகி வருகிறார் தஞ்சை சேர்ந்த விவசாயி.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த திருப்பந்தூர்த்தியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவர் கடந்த 40 ஆண்டுகளமாக தென்னை சாகுபடியில் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இளநீர், தேங்காய், மற்றும் கொப்பரை ஆகியவற்றிற்கு உரிய விலை இல்லாததால் போதிய வருமானம் இல்லை என இரண்டு ஏக்கர் விளைநிலத்தில் பயிரிடப்பட்ட 145 தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி வருகிறார்.
மேலும் விவசாயி ராமலிங்கம் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு தேங்காய் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் அப்போது வெட்டுக்கூலி 50 பைசா இருந்தால் போதிய லாபம் கிடைத்தது. ஆனால் தற்போது வெறும் 145 தேங்காய் 800 ரூபாய்க்கு, அதாவது ஒரு தேங்காய் 5.50 காசுக்கு விற்கப்பட்டாலும் போதிய லாபம் இல்லை, உர விலை உயர்வு, வெட்டு கூலி தற்போது 50 ரூபாய் அனைத்தும் உயர்ந்துள்ளது.
சந்தையில் ஒரு இளநீர் 50 ரூபாய்க்கும், தேங்காய் 20 முதல் 30 ரூபாய் வரை விற்கப்படுவதாகும். ஆனால் அதை விளைவிக்க கூடிய விவசாயிகள் எங்களுக்கு ஒரு தேங்காயின் விலை ஐந்து ரூபாயில் விலை அடங்கிவிடுகிறது.
இதனால் தங்களுக்கு உரிய லாபம் இல்லாமல் தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவிக்கிறார். தென்னைக்கு செலவு செய்யக்கூடிய தொகை கூட தங்களுக்கு கிடைக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் விவசாயி, தன் பிள்ளையை போல் 40 ஆண்டு காலம் வளர்த்த தென்னையை மனமில்லாமல் வெட்டி வருவதாகவும், இதனால் இரவு நேரங்களில் உறக்கம் கூட வருவதில்லை என அவர் தெரிவிக்கிறார்.
இதேபோல், தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை இல்லை என கடந்த 25ஆம் தேதி தென்னை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.