தமிழ்நாட்டில் 85 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று 1,00,000 மையங்களில் 31வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வரும் தடுப்பூசி முகாம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில் அதிக அளவில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
இதனால் கரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளன. தொடர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையால், தமிழகத்தில் 85 சதவிகிதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.