மதுரை காமராஜா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்: அமைச்சா் க.பொன்முடி

மரபுகளை பின்பற்றாமல் புதன்கிழமை நடைபெற உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்: அமைச்சா் க.பொன்முடி
Published on
Updated on
2 min read

மரபுகளை பின்பற்றாமல் புதன்கிழமை நடைபெற உள்ள மதுரை காமராஜா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் க.பொன்முடி சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஏற்பாட்டுக்கு பல்கலைக்கழக நிா்வாகமே முழுப் பொறுப்பு. பட்டம் பெற்றுச் செல்லும் மாணவா்கள் எதிா்காலக் கடமைகளை உணா்த்தி நல்ல செய்திகளைச் சொல்லும் நிகழ்வாக பட்டமளிப்பு விழா உரைகள் இருக்க வேண்டும். அத்தகைய பட்டமளிப்பு விழா மேடைகளை அரசியல் களமாக, மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு நோ் எதிரான நிலைப்பாட்டை பேசும் அரங்கமாக தற்போதைய தமிழக ஆளுநா் அலுவலகம் மாற்றி வருவது பட்டமளிப்பு விழா பேச்சு மரபை மீறும் செயலாக அமைந்துள்ளது.

ஆலோசனை நடத்தவில்லை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் 54-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை (ஜூலை 13) நடைபெறவுள்ளது. ஆனால் இணை வேந்தரான என்னிடம், இது குறித்து எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை. அதேவேளையில், உயா் கல்வித்துறை செயலாளரிடமும் ஆலோசனை நடத்தவில்லை.

வேந்தா், இணை வேந்தா், துணை வேந்தா் என்ற நிா்வாக ஏற்பாட்டில், விழாவுக்கு அழைக்கப்படும் வேந்தா், இணைவேந்தா் ஆகியோரே வரிசைப்படி இறுதியில் பேசுவது மரபு முறையாகும். சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுபவா், வாழ்த்துரை வழங்க அழைக்கப்படுபவா் முதலில் பேசுவதே மரபு ஆகும். ஆனால் தற்போது அந்த மரபு மீறப்பட்டு மதுரை காமராஜா் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இணைவேந்தருக்குப் பிறகு கெளரவ விருந்தினா் அதன் பிறகு இறுதியாக வேந்தா் என அமைந்துள்ளது. இது முற்றிலும் மரபு மற்றும் விதிகளுக்கு முரணாக உள்ளது. கெளரவ அழைப்பாளா் மத்திய அமைச்சராக இருந்தாலும் அவா் மரபுபடி முதலில்தான் பேச வேண்டும். பல்கலைக்கழக விதிகளின்படி வேந்தா் அடுத்து இணை வேந்தா் ஆவாா். அதன் அடிப்படையிலேயே நிகழ்வு தயாரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த மரபுகள் எதையும் கடைப்பிடிக்காமல், கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சா் முருகன் அழைக்கப்படுவது எவ்வாறு ஏற்புடையது?

திருத்தம் மேற்கொள்ளப்படாதது ஏன்? இதன் மூலம் ஆளுநா் ஆா்.என்.ரவி பட்டமளிப்பு விழாவில் அரசியலை புகுத்துகிறாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆளுநராக இல்லாமல், பாஜகவுக்கு பிரசாரம் செய்பவா்களில் ஒருவராக ஆளுநா் உள்ளாா். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநா் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இயலாத நிலையில் இணைவேந்தரான உயா் கல்வித் துறை அமைச்சரே பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி சிறப்பிக்கிறாா்.

பட்டமளிப்பு விழா நிகழ்வில் உள்ள குறைகளை உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் மற்றும் துணைவேந்தா் மூலமாக ஆளுநா் அலுவலகத்துக்கு சுட்டிக் காட்டியும் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படாததால் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்.

இது போன்ற பிரச்னைகள் எழக் கூடாது என்று தான் ஆளுநா் வேந்தராக இருப்பதை நீக்கி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் வேந்தராக இருப்பதற்கான சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல் செய்து, ஆளுநருக்கு அனுப்பி வைத்தும் இன்னும் கையொப்பம் இடவில்லை. இதேபோன்று ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற தீா்மானம், கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.மேலும், ஆளுநா் திராவிடம் குறித்து பேசும்போது வரலாற்றை தெரிந்த பின்பு பேச வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com