சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டத்தில் திருமணமான மூன்று ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்ததால், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறையில் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் மகள் இலக்கியா(28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜன்(35) என்பவருக்கும் திருமணம் ஆகி 3 ஆண்டுகளான நிலையில் இதழினி என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் இலக்கியாவை கணவர் பாண்டியராஜன் மற்றும் குடும்பத்தினரிடையே வரதட்சணை பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே மயிலக்கோயில் தனது தந்தை வீட்டிற்கு கடந்த 10-ம் தேதி இலக்கியா வந்திருந்தார். நேற்று இலக்கியாவிற்கு விவாகரத்து கேட்டு, நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பபட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | கோத்தபய ராஜபட்ச பதவி விலக தாமதிப்பது ஏன்?
இதனால் மனமுடைந்து நேற்று இரவு இலக்கியா வீட்டிற்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இலக்கியாவின் தந்தை குணசேகரன், கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.