வாழப்பாடி: சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில், முதியோர் மற்றும் பெண்களின் ஏடிஎம் கார்டுகளை வைத்து, பணம் திருடிய இரண்டு இளைஞர்களை வாழப்பாடி போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அய்யூர் பகுதியைச் சேர்ந்த சிவானந்தன் (22). அதே பகுதியைச் சேர்ந்தவர் கதிரவன் (30). நண்பர்களான இருவரும் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திர மையங்களுக்கு அருகில் நின்று கொண்டு, பணம் எடுக்க வரும் முதியவர்கள் மற்றும் பெண்களிடம், பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து, அசல் ஏடிஎம் அட்டைகளை வாங்கிக்கொண்டு போலி அட்டைகளை மாற்றி கொடுத்து விட்டு, ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளனர்.
இருவர் மீதும் கடந்த 2017 மற்றும் 2019-இல் எடப்பாடி பகுதியில், முதியவர்களிடம் ஏடிஎம் பணம் எடுத்துக் கொடுப்பதை போல நடித்து ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 38 ஏடிஎம் அட்டைகள் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் எடப்பாடி போலீஸில் ஒப்படைத்தனர்.