சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றி எடப்பாடி பழனிசாமியிடம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் இடையே, அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கு இடையே நடந்த மோதலைத் தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பில் தனித்தனியே முறையிடப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றவும் மேலும் அலுவலகத்தின் சாவியை இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், 'அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை நேரடியாக ரத்து செய்தது தவறு. வருவாய் கோட்டாட்சியரின் அதிகாரத்தை தன்னுடைய அதிகாரமாக நீதிமன்றம் பயன்படுத்தியுள்ளது. எனவே, இது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல. நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க | அதிமுக அலுவலக சாவியை இபிஎஸ்ஸிடம் ஒப்படைக்க உத்தரவு