ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரம் ஆண்டாள் பிறந்த தினமாகும். இதையொட்டி அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் தேரோட்டம் நடைபெறும். இத்திருவிழா கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.
இந்த ஆண்டுக்கான ஆடிப்பூரத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆண்டாள் கோயில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான கொடியேற்ற விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சா்வ அலங்காரத்தில் காட்சியளித்தனா். பின்னா் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரம் மலா்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது.
காலையில் கொடி பட்டம் மாடவீதி 4 ரத வீதிகள் வழியாக மேளதாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது. பின்னா் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும் கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை 9 மணியளவில் ஆண்டாள் கோயில் அா்ச்சகா் பாலாஜி கொடியேற்றினாா்.
நாள்தோறும் ஆண்டாள் ரெங்க மன்னாா் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருள்கிறாா். விழாவின் 5 ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (ஜூலை 28) 5 கருட சேவையும், 7 ஆம் நாளான சனிக்கிழமை (ஜூலை 30) சயனசேவையும் அதைத் தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்ட் 1 ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 1 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.