காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் அதிகாலை வீட்டின் மேல் கூரை பூச்சு விழுந்து பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், அய்யம்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த மூன்று நாள்களாகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில் நேற்று வழக்கம்போல் இரவு உணவை முடித்துவிட்டு குடும்பத்துடன் படுத்திருந்த நிலையில் அதிகாலை 4 மணி அளவில் திடீரென வீட்டின் மேல் கூரை பூச்சு விழுந்தது.
இதில், மூன்றாவது வகுப்பு படிக்கும் அவரது மகன் நேதாஜியின் தலையிலும், அவரது உறவினர் மகள் மாளவிகாவின் கால்களிலும் விழுந்தது.
பலத்த காயம் ஏற்பட்டு இருவரையும் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6 மணிக்கு நேதாஜி உயிரிழந்தார்.
காயமடைந்த மாளவிகா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் வாலாஜாபாத காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.