சென்னை: கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக இருந்த நிலையில் தற்போது 100-ஐ எட்டியுள்ளது.
அடுத்தடுத்த நாள்களில் கரோனா பாதிப்பு உயர வாய்ப்பு உள்ளதால் அடுத்த 2 வாரத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தங்கம் விலை ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது