திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் கால் கழுவச் சென்றபோது மூழ்கிய மாணவனின் சடலம் 2 நாள்களுக்குப் பின் பூண்டி ஏரியில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் தரப்பில் கூறியதாவது,
திருவள்ளூர் அருகே அனந்தேரியைச் சேர்ந்த ரமேஷின் மகன் பூபதி(13). இவர் அந்தக் கிராமத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 8ஆம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டருகே உள்ள கிருஷ்ணா கால்வாயில் இயற்கை உபாதைக்குப் பின் கால் கழுவச் சென்றாராம். அப்போது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டாராம்.
இதுகுறித்து அக்கிராமத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தேடிய நிலையில் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் இரண்டு நாள்களுக்கு பின் 13 கி.மீ தூரம் உள்ள பூண்டி ஏரியில் மாணவனின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.