புதுச்சேரி: புதுச்சேரியில் 8-வது சர்வதேச யோகா தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை, மத்திய அமைச்சர் எல். முருகன் பங்கேற்றுள்ளனர்.
புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் எட்டாவது உலக யோகா தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் யோகா தின விழா பயிற்சி காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இதையும் படிக்க.. தமிழகத்தில் பரவலாக மழை: என்ன செய்திருக்கிறது அரசு?
நாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நிகழாண்டு யோகா தின விழா பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. கடற்கரை காந்தி திடலில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் யோகா பயிற்சியை தொடங்கி வைத்து, யோகா பயிற்சியில் கலந்து கொண்டார். அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், நமச்சிவாயம், சாய் சரவணகுமார், தேனி ஜெயக்குமார் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, அரசுத்துறை அதிகாரிகள், மாணவர்கள் 2000 பேர் வரை கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றுள்ளார். இவர்கள் காந்தி சிலை முன்பு யோகாசன பயிற்சி மேற்கொண்டுள்ளனர். யோகா வல்லுநர்களும் பங்கேற்று பயிற்சி அளிக்கின்றனர்.
புதுச்சேரியில் சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட 75 இடங்களில் இந்த யோகா தின விழா சிறப்பு பயிற்சி நடைபெறுகிறது. இந்த யோகா தின விழாவில் 3,500 பேர் வரை கலந்து கொண்டுள்ளனர்.