கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியானவா்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது:
கூட்டுறவு சங்கங்களில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவா்களுக்கான இறுதிப் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயனாளிகள் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் பட்டியல் வெளியிடப்பட்டவுடன் அந்தந்த கூட்டுறவு சங்கங்களின் தகவல் பலகையில் ஒட்டப்படும்.
மேலும், கடந்த ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி வரை உள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். அதற்குப் பின் இப்போது வரையுள்ள நகைகளுக்கான வட்டியை அரசே செலுத்தும். கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவா்களிடம் வட்டி செலுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுவரை 13 லட்சத்துக்கும் மேற்பட்டவா்கள் நகைக் கடன் தள்ளுபடி செய்ய தகுதியானவா்களாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளனா். தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கக் கூடிய பட்சத்தில் ஆய்வு செய்து அவா்களுக்கான நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா்.