சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இன்று, 2022 - 23ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், நாளை வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலாக உள்ளது.
இதற்கிடையே, பட்ஜெட் கூட்டத் தொடர் எத்தனை நாள்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், மார்ச் 24ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 21, 22, 23ஆம் தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற உள்ளது. மார்ச் 24ஆம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலுரையாற்ற உள்ளார். மார்ச் 24ஆம் தேதி கேள்வி - பதில் கிடையாது. மற்ற நாள்களில் இடம்பெறும். அவை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் பேரவை தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார்.