திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டி இன்று நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் ஸ்ரீ நரசிம்மர் சுவாமி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகின்றது. கடந்த 19-ஆம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது.
யோக நரசிம்ம சுவாமி பிரமோற்சவ விழாவின் 7-ஆம் நாளான இன்று காலை நரசிம்மர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது. திருத்தேர் வைபவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார் அழகிய சிங்கர்.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். வருகிற 29-ஆம் தேதி வரை நரசிம்ம சுவாமி பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.