போடி: போடியிலிருந்து கேரளத்துக்கு காலை ஜீப்பில் கடத்த முயன்ற 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. அதிகாரிகள் துரத்தும் போது ஜீப்பை கவிழ்த்துவிட்டு தப்பியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போடி பகுதியிலிருந்து கேரளத்துக்கு அதிகளவில் ரேசன் அரிசி கடத்துவதாக வந்த தகவலையடுத்து கடந்த 10 நாள்களாக தேனி உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் வருவாய்த் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 10 நாள்களில் இரண்டு முறை ஜீப்பில் கடத்தப்பட்ட 3,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சனிக்கிழமை காலை போடி முந்தல் சாலையில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு வட்டாட்சியர் கண்ணன், போடி வட்ட வழங்கல் அலுவலர் ராமராஜ் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஜீப் ஒன்று அதிகாரிகளை கண்டதும் நிற்காமல் சென்றது. அதிகாரிகள் ஜீப்பை துரத்திச் சென்றனர். இதில் ஜீப்பை ஓட்டிச் சென்ற ஈஸ்வரன் என்பவர் ஜீப்பை போடி ரயில் பாதை அமைக்கும் பகுதி அருகே கவிழ்த்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
அதிகாரிகள் ஜீப்பை சோதனை செய்தபோது அதில் 1,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது.
அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அரிசியை கடத்திய ஈஸ்வரனை தேடி வருகின்றனர். மூன்று தினங்களுக்கு முன் அரிசி கடத்தி சிறைக்கு சென்று வந்த ஈஸ்வரன் மீண்டும் அரிசிக் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.